- கௌதம சித்தார்த்தன்
மீண்டும் ஒரு விபத்து. இது ஐந்தாம் முறை. இதுவரை சிறுசிறு காயங்களுடனும் சிராய்ப்புகளுடனும் எதிர் கொண்ட அந்த விறுவிறுப்பு, இந்த முறை இடது கண்ணுக்குக் கீழுள்ள எழும்பில் விரிசல் ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவரான எனது மகன், ‘சின்னஅடிதான்… அதுவாகவே கூடிக் கொள்ளும்’ என்று தோளில் தட்டிக் கொடுத்து விட்டான். இதிலும் வெற்றிகரமாகத் தப்பித்துக் கொண்டேன் என்பதைப் பார்த்து, நான் படுத்திருக்கும் கட்டிலின் கால்மாட்டருகில் சின்னதாக உட்கார்ந்து கொண்டிருக்கும் விதி இடிஇடியென நகைத்தது.
படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டே, ‘விபத்து ஏன் என்னை இப்படித் துரத்துகிறது?’ என்று வீட்டு முகட்டை வெறித்துப் பார்த்தவாறு, யோசனையிலாழ்ந்தேன்.
சிறுவயதிலிருந்தே எனக்கு வேகம் மிகமிகப் பிடிக்கும். அதுவும் ராட்டினத்தின் அதிவேகப் பாய்ச்சல் எனக்குள் போதையூட்டும் கிறக்கத்தை ஏற்படுத்தும். அதற்காகவே தொலைதூரத்தில் நடக்கும் திருவிழாக்களுக்கெல்லாம் போய் ராட்டினம் ஏறுவேன். அதிவேகத்தில் பாயும் ஆனந்த ஓட்டம், என் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலைச் சூடேற்றும் விசை எழும்புக்குருத்தில் பரவும். வேகம், களிவேகம், காந்தல்வேகம்.
அம்மா அடிக்கடி சொல்லுவாள். நான் எட்டு மாதத்திலேயே நடக்கப் பழகினவன் என்று. ‘உன்னைக் கேட்கும்போது பதில் சொல்லு… முந்திரிக் கொட்டை மாதிரி முந்தாதே’ என்பார் கணக்கு வாத்தியார். பள்ளியில் என் வகுப்புப் படிப்பைத் தாண்டி, உயர் வகுப்பில் நோட்டம் விட்ட அதிகப் பிரசங்கம், பதின் பருவத்தில், காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக் கொண்டு குண்டும்குழியிலுமான எங்கள் வரப்பட்டிக்காட்டுச் சாலைகளில் நாயகனாக வலம் வந்தது, உள்ளூர் சைக்கிள் பந்தயங்களில் வெற்றி வாகை சூடியது,
எழுத்தாளனானபோது, எல்லோரும் பின்நவீனத்துவத்தில் தேங்கியபோது, நான் புதுவகை எழுத்துக்குத் தாவியது, 80களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைளில், ‘எனது வேகம், தாண்டிப்போகும் எனது எதிர் வேகத்தால், பயணமே இல்லாமலாகிறது, திசையேகும் எனது தூரமும் துயரமும் அதுதான்’ என்று கவிதைகள் எழுதி அதகளப்படுத்திக் கொண்டிருந்த சோர்வறியாக் கால்களில், இன்றும் சதா குறுகுறுத்துக் கொண்டிருப்பது வேகம்தான்.
மோட்டார் சைக்கிளை எடுத்தால் 80 லிருந்து 100 கி.மீ வேகத்தை முள் தொட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். பிரமிளின் கவிதையைப் போல தீராத பயணங்களில் அதிவேகத்தை எழுதிச் செல்கிறது என் மோட்டார் சைக்கிள்.
ஆனால், இது சுற்றம்சூழ் மனிதர்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அறிவுரைகளும், கண்டிப்புகளும், கேலிகளும், கோபங்களும் தொடர்ந்து போட்டுத் தாக்கியதில், முள்ளின் வேகம் மட்டுப்பட ஆரம்பித்தது.
அப்போதுதான் அது நிகழ்ந்தது. முதல் விபத்து. சிறுசிறுகாயங்கள், சிராய்ப்புகள். ஏதேதோ மனதை அழுத்தும் எண்ண ஓட்டங்களுடன் படுக்கையில் சாய்ந்திருந்தேன். நலம் விசாரிக்க வருபவர்களின் பேச்சு, ‘வேகமாப் போனால் இப்படித்தான்’ என்ற கேலியும் கிண்டலுமாக உடலெங்கும் பரவிநிற்கும். இது வெற்றிகரமான ஐந்தாம் முறை.
அப்பொழுதுதான் கவனித்தேன், அந்த நடப்பு நிகழ்வுகளுக்குள் ஒரு வினோதமான புதிர்த்தன்மை பதுங்கியிருப்பதை. ஆம். அதிவிரைவாக மின்னல் வேகத்தில் என் மோட்டார் வண்டி செல்லும்போது எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. விபத்தின் ஒரு சிறு கீறல் கூட புலப்படவில்லை. ஆனால், மெதுவாக வண்டியின் சக்கரங்கள் சுழலும்போது சரேலென்று காட்சிகள் மாறுகின்றன. முறுக்கும் விசையைக் கை நெகிழவைக்கும் நேரத்திற்குள் விபத்துகள் நடந்தேறிவிடுகின்றன. என்ன ஒரு அற்புதமான மனவிலகல். மனம், நீளும் பாதைகளின் ஒருங்கு குவிப்பிலிருந்து, நகரும் ஓட்டத்திற்கு மாறும் தருணங்களிலேற்படும் தடுமாற்றம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் துவக்கத்திலிருந்தே வடிவம் கொள்ளும் தன்மை, சடுதியில் மாறுபடும்போது, ஏற்படும் உணர்ச்சிப் போராட்டம் அது.
சிலவருடங்களுக்கு முன்பு நானும் எனது தோழி மைத்ரேயியும் ஒரு சைக்கிள் ஓட்டுபவரை நேர் கொண்ட காட்சிகள் மனதுக்குள் ஓடுகின்றன.
எங்கள் ஊருக்கு சைக்கிள் ஓட்டுபவர்கள் வந்திருந்தார்கள். திருவிழாக் கூட்டம் போல அலையடித்துக் கிடந்தது கோயில் மைதானம். ஒலிபெருக்கி சைக்கிள் ஓட்டுபவரின் சாதனைகளை முழக்கிக் கொண்டிருக்க, மக்கள் திரள் ஒவ்வொரு பொழுதிலும் கூடிக்கொண்டேயிருந்தது. சுற்றுப்புற ஊர்களிலிருந்தெல்லாம் திரண்டிருந்தார்கள் என்பதை ஊர்நாய்கள் குரைத்துச் சொல்லின. இவ்வளவு பரபரப்பிற்கான அதிசயம் இதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நானும் நிகழ்வுக்குப் போயிருந்தேன்.
அது முற்றிலும் வித்தியாசமான சைக்கிளோட்டம். நான்கைந்து நாட்கள் சைக்கிளை விட்டுக் கீழே இறங்காமல் தொடர்ந்து ஓட்டிக்கொண்டே இருப்பது என்கிற பாணிதான், பொதுவான சைக்கிளோட்டத்தின் முக்கியமான மையம். கூடவே சைக்கிள் ஓட்டிக் கொண்டு குழல்விளக்குகள் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது போன்றவைகளும் நடக்கும்.
ஆனால் இந்த சைக்கிளோட்டம் அப்படியானதல்ல; கோயில் மைதானத்தின் சுற்றுப்புறப்பாதையில், அவரும், அவரது துணைவியாரும் எதிரும் புதிருமாக மிக வேகமாக சைக்கிளை ஓட்டுவார்கள். முழு வேகத்தையும் கூட்டிக் கொண்டு சைக்கிள்கள் சுற்றும் கிறுகிறுப்பிலும், அதில் ஒருவர்மீது ஒருவர் இடித்துக் கொள்ளாமலும், ஒரேவிதமான நேர்கோட்டில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் விறுவிறுப்பிலும், அந்த சைக்கிளோட்டம் பதட்டம் கலந்த பீதியை உருவாக்கிவிட்டிருக்கும்.
இது போன்ற ஒரு ஆட்டத்தை இதுவரை கேள்விப்பட்டிராத சுற்று வட்டார மக்கள் விறுவிறுப்பான எண்ண ஓட்டங்களோடு சாப்பாட்டுக்குக்கூட எழுந்து போகாமல் மைதானத்திலேயே அமுங்கிக் கிடந்தார்கள்.
எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடித்துப் போயிற்று. அந்த மிகப் பெரிய மைதானத்தைச் சுற்றிலும் மக்கள் ஆரவாரமாய் அமர்ந்திருந்தார்கள். நடுமையத்தின் முனையில் ஒரு கம்பம் ஒன்று நடப்பட்டு அதன் முனையிலிருந்து நாலாபுறமும் வர்ணக்காகிதங்களின் தோரணம் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வளைகோடாக மாற்றப்பட்ட மைதானத்தின் சுழல் வட்டப் பாதையில் இருவரது சைக்கிள்களும் எதிரும் புதிருமாகச் சுழன்றோடிக் கொண்டிருந்தன.
இருவரது சைக்கிள்களும் ஒரு 80 டிகிரி சுழற்சியில் சுழன்று ஒரேமுனையில் சீறிப்பாய்ந்து வரும் அழகு. அதன் பாய்ச்சல் நேர்முகமாய் எதிர் கொண்டு மோதிக்கொள்கின்ற கண்ணிமைக்கும் தருணத்தில், கச்சிதமாக வடிவமைத்து வைத்திருக்கும் செயல்திட்டம் போல இரு வண்டிகளும் லாவகமாய் சரேலென்று விலகி, சடுதியில் மீண்டும் அதே வட்டப்பாதையில் பாய்ந்து போகின்றன. இந்த அபாரமான விறுவிறுப்பில் மக்களின் உற்சாகம் மைதானம் புரண்டோடியது. எனக்குள் பதுங்கிக் கிடந்த உணர்வோட்டங்கள் உடலெங்கும் வெட்டிவெட்டி எழுந்தன. அவர்களது இந்த ஆட்டம் ஒரு கலாபூர்வமான நிகழ்வாக மாறிக் கொண்டிருந்தது.
மக்கள் கூட்டம் இந்த ஆட்டத்தின் மந்திரத்தன்மையில் ஆட்பட்டு மயங்கிப் போய் அமர்ந்திருந்தனர். சூடேறும் வெய்யில், நிழலாக மங்கி மறையும் வரை விறுவிறுப்புக் குன்றாமல் ஆட்டம் நடந்தேறியது. இறுதியில், மக்கள் தங்களது அன்பையும், பரவசத்தையும் மைதானத்தின் மையத்தில் விரிக்கப் பட்டிருந்த கல்லாத்துணியில் பணமாகக் கொட்டிவிட்டுப் போனார்கள்.
அவர்களுடன் இந்த சைக்கிளோட்டத்தில் ஆழ்ந்து போய் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் ஏதோ ஒரு விஷயம் பிடிபடாமல் நெருடுவதை உணர முடிந்தது. உந்து விசையை வேகத்துடன் மிதிக்கும் கால்கள், பொருதிப் போகும் மன ஓட்டத்தையும், கைப்பிடியை வாகாக வளைத்துச் செல்லும் கைகள், லாவகமாக விலக்கியோட்டும் மனவிலகலிலும், பொருந்தியும் விலகியும் ஆடும் ஆட்டத்தை, ஒரு இனம் புரியாத சூட்சுமம் ஒன்று செயல்படுத்துவதாக யூகித்தேன்.
சைக்கிளோட்டம் முடிந்த அன்று இரவு, அவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.
மெதுவாகத் தயங்கியபடியே பேசினார் அவர். ஆரம்பத்தில், இறங்காமல் தொடர்ந்து சைக்கிளோட்டுவது, தலையில் குழல் விளக்கை உடைப்பது, தீப்பந்தம் விளையாடுவது என்றுதான் செயல்பட்டிருக்கிறார். அவரது மனைவி வாழ்க்கையில் இணைந்த பிறகுதான் இந்த வேகமான சைக்கிள் ஓட்டம் என்று, மனைவியின் பக்கம் கையைக் காட்டிக் கொண்டு கல்லாத்துணியை நோக்கி விரைந்தார்.
அவரது மனைவியோடு பேசப்பேச நான் பிரமித்துப் போய்விட்டேன்.
***
சென்னிமலையின் சிறுகிராமத்தில் பிறந்தவர்தான் அந்த அருக்காணி. அப்பா மில் வேலைக்குப் போகிறவர். அம்மாவுக்கு வீட்டில் ராகிமாவு அரைக்கும் வேலை, அரைபடும் ராகிமாவைச் சிறுசிறு பொட்டலங்களாகப் போட்டு கடைகளில் விற்பனை செய்து வருபவர் அண்ணன். அளவான குடும்பம்.
அந்தக் குடும்பத்திலேயே அருக்காணிதான் படுசுட்டி. பிறக்கும்போதே பாதசக்கரத்தோடு பிறந்தவள் என்று அருக்காணி என்று பெயர் வைத்தார்களாம். அவளது கால்கள் ஓரிடத்தில் நில்லாமல் துருதுருவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டேயிருக்கும். அவள் படிக்கும் பள்ளிக்கூடம் தனது ஊரிலிருந்து தொலைதூரத்திலிருப்பதால், நேரமே புறப்பட்டு விடுவாள். பேருந்து வசதியில்லாததால் பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டும்.
அவளோடு கூடப்படிக்கும் பையனான தங்கராசு சைக்கிளில் வருவான். அவளைப் பார்த்து மணியடித்தவாறு கேலி செய்து கொண்டே சைக்கிளை ஓட்டுவான். ஆனால் அவளை ஏற்றிக் கொள்ளாமல் கடந்து போவான். ஒருநாள், அம்மா சாப்பாடு போடுவதற்கு தாமதமாகியதால், பள்ளிக்கு நேரமாகிவிட்டது. வாத்தியாரின் பிரம்பு சுளீரென்று இழுக்கும் வலி அவளுக்குள் இறங்கியது. ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து மணியடிக்கும் சத்தம் கேட்டது. திரும்பினால், தங்கராசு.
அவள், ‘பள்ளிக்கு நேரமாகி விட்டதால் தன்னையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகுமாறு’ வேண்டினாள். அவன் ஏதும் பேசாமல் சரேலென்று சைக்கிளை வேகமாக ஓட்டிப் போய் பத்தடிதூரம் கொண்டு போய் நிறுத்திக் காலை ஊன்றி அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் ஆசையுடன் ஒரே ஓட்டமாக ஓடி சைக்கிளில் ஏறிக் கொள்ள ஓடினாள். அவள் அருகில் வருவதற்குள், அவன் சட்டென சைக்கிளை ஓட்டிக் கொண்டு முன்னால் போனான். இச்செய்கையில் அவள் திகைத்துப் போய் நின்று விட்டாள். அவனது சைக்கிள் பத்தடிதூரம் முன்னால் போய் நின்று விட்டது. அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். வா வந்து ஏறிக் கொள் என்பது போலிருந்தது அப்பார்வை. அவள் முழித்துக் கொண்டே சைக்கிளை நோக்கி ஓடினாள். அருகில் வருவதற்குள் சைக்கிள் மீண்டும் பத்தடி தூரம் பாய்ந்து போய் நின்றது. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த வேடிக்கையான விளையாட்டு அவளுக்குப் பெரும் வாதையாக இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். அவளுக்கு அழுகையே வந்து விட்டது. மீண்டும் மீண்டும் சைக்கிளை நோக்கி ஓடிவந்தால், சைக்கிள் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. கோபமும் எரிச்சலும் அவளுக்குள் மண்ட, இப்படியே ஒருவழியாக பள்ளியை அடைந்தாள்.
அன்று இரவு அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. உடல் முழுக்கக் காந்தலாய் எரிந்தது. படுக்கை கொள்ளாமல் புரண்டு புரண்டு படுத்தும் கண்ணுக்குள் அவனது கேலிச்சிரிப்பு கொக்கணை கட்டுகிறது. அவன் சைக்கிளை நிறுத்தி நிறுத்தி ஏமாற்றும் காட்சிகள் தலை முழுதும் ஓடுகின்றன. அந்த வாதையிலேயே சற்றைக்கெல்லாம் தூக்கம் வந்துவிடுகிறது. அதில் அழகான கனவு ஒன்று எழும்புகிறது. ஒரு மிக நீண்ட சாலையில் தங்கராசு சைக்கிளை மிதித்துக் கொண்டு வருகிறான், அவள் சைக்கிளை முந்திக்கொண்டு ஓடுகிறாள். கடைசிவரை அவனது சைக்கிளால், அவளது வேகத்தைப் பிடிக்க முடியாமலேயே போய்விடுகிறது.
அடுத்த நாள் காலையில் அவள் பள்ளிக்குப் போகும்போது, பின்னால் மணியடிக்கும் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் எகத்தாளச்சிரிப்புடன் அவன் நின்றிருக்கிறான். அவள் அவனையே வெறித்துப் பார்க்கிறாள். அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்கமுடியாமல் அவனது சைக்கிள் அவளைத் தாண்டிச் செல்கிறது. அருக்காணியின் கால்களில் குறுகுறுவென்று வேகம் ஏறியடிக்கிறது.
அப்போதுதான் அது நடந்தது. சரேலென்று அவளது கால்கள் ஓட ஆரம்பித்தன. ஓட்டம் கண்ணிமைக்கும் வேகமாக மாறி அவனது சைக்கிளைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தாள். தங்கராசுக்கு அந்தச் செய்கை பெரும் சவாலாக இருந்தது. உடனே தனது சைக்கிளின் உந்து விசையில் கால்ளைப் பலமாக உந்தினான். சக்கரங்கள் வேகமாகச் சுழல ஆரம்பித்தன. ஆனால், அதைவிட வேகத்தில் அருக்காணியின் கால்கள் ஓடிக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தபோது திகைத்துப் போனான். அதிர்ச்சியுடனும் அவமானத்துடனும் பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியை வேகம் கூட்டினான்.
வண்டி செங்குத்தாக ஏறும் மேடான சாலையில் வேகமாக ஏறியதில் அவனது கணுக்கால்கள் வலித்தன. மேட்டில் ஏறி தாழ்வான சரிவில் அதே வேகத்தில் இறங்கும்போது ஆசுவாசப்படுத்திக் கொண்டவனாய் சாலையின் இருமருங்கிலும் அவளைத் தேடினான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவளைக் காணவில்லை. வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், ஒருவேளை பின்தங்கி விட்டாளோ… வெகுதொலைவில் சாலையின் ஓரமாய் உயர்ந்திருந்த புளிய மர நிழலில் ஒதுங்கி இளைப்பாறிக் கொண்டிருப்பவள்… சந்தேகமில்லாமல் அவள்தான்!
அவனுக்குள் ஒரு இனம்புரியாத பயம் சுருண்டு கொண்டது. இந்த நேரத்திற்குள் எப்படி இவ்வளவு தூரம் வந்து சேர்ந்தாள்? பதட்டத்துடன் வண்டியை ஒரே ஓட்டமாய் செலுத்த ஆரம்பித்தான். சைக்கிள் அவளருகில் வந்து சேரும் இடைவெளியில் அவள் மெதுவாக எழுந்து வந்து சாலையின் மையத்தில் நின்று கொண்டு அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் நேற்றைய ஆட்டத்தின் மிச்சமிருந்தது.
சரிவான சாலையில் வேகம் கூடிவந்த வண்டி அவளைப் பார்த்ததும் இன்னும் வேகமெடுத்தது. அது பக்கத்தில் வரவர, பத்தடி தூர இடைவெளியில் அந்தக் கண்ணாம் பூச்சி விளையாட்டை நிகழ்த்தினாள் அவள். அருக்காணியின் ஓட்டம் ஆரம்பமானது. பற்களை வெறுவிக்கொண்டு வண்டியை மிதித்தான் அவன். மீண்டும் வண்டி அவளைத் தொட யத்தனிக்கையில், அவளது கால்கள் வேகம் கூடி பத்தடி இடைவெளியில் போய் நிற்கின்றன. அவனுக்கு முன்னால் பழிப்புக் காட்டுபவள் பெண்ணாக இல்லாமல், மருள் வந்த மாரியாகத் தென்பட்டாள். பயத்தாலும், அவமானத்தாலும் குன்றிப் போனான் அவன். இந்த ஆட்டத்தின் போக்கிலேயே பள்ளியை வந்தடைந்தார்கள். உடல் முழுதும் துலுக்கு கூடியது போல நடுக்கத்துடன் வேகமெடுக்கும் அவளது கால்களை, அவனால் தொடமுடியாமலேயே போய்விட்டது.
அவள் அன்று புதிதாய்ப் பிறந்தது போல உணர்ந்தாள்.
அடுத்தநாள், நேரமே எழுந்து, புறப்பட்டு, சாலையில் வந்து நின்று கொண்டு அவன் வருவதற்காகக் காத்திருந்தாள். அவன் வரவில்லை. வெகுநேரம் வரை எதிர்பார்த்து வெறுத்துப் போய் பள்ளிக்கூடம் வந்து பார்த்தால், பம்மிக் கொண்டு நிற்கிறான் அவன். அப்போது தான் தெரிந்தது, தங்களது ஊருக்கு வேறு ஒரு சுற்று வழியும் இருக்கிறதென்று.
பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் இருக்கும் பெருமாளாசாரியின் கொல்லுப்பட்டறை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆளுயர துருத்திச் சக்கரம் சுழலும் அழகையே பார்த்துக் கொண்டு நிற்பாள். வீட்டில் தனது அம்மா, ராகிமாவு அரைக்கையில், வெடுக் வெடுக்கென்று கைமாற்றி மாற்றி ஆரியக்கல்லைச் சுற்றும்போது, அதன் கல்லோட்டம் மறைந்து, நிகழும் அதன் சக்கர வட்டம் அவளுக்குள் ஒரு வேகத்தைக் கிளர்த்தும். ஆனால், பெருமாளாசாரியின் துருத்திச்சக்கரத்தில் பொருதியுள்ள ஆரக்கால்கள், அவரது மனைவியின் தூங்குமூஞ்சிக் கைகளில் சோம்பல் முறித்துக் கொண்டு ஒவ்வொன்றாக நகரும்போது, பாவமாக இருக்கும் அந்தக் காட்சி. ஒருமுறையாவது அந்த ஆரக்கால்களை மறைந்து போகச் செய்து ஒரு பிரம்மாண்டமான சக்கரவட்டமாக மாற்றிக் காட்டவேண்டும் என்ற தவிப்புடன் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள் அவள்.
ஒருநாள் இதைக் கண்ணுற்ற ஆசாரி, ‘ஏ கண்ணு சக்கரம் சுத்தறியா?’ என்று அழைக்க அவள் வெகு மகிழ்ச்சியோடு, குதூகலமாய் ஓடிவந்து சக்கரத்தின் உந்து மிதியைப் பற்றினாள்.
ஆசாரி துருத்தி உலையின் முன் அமர்ந்து, ஒரு சிறு உலோகத்தை எடுத்துப் போட்டு ஒரு கை நெல்உமிமை அதன்மேலே பரப்பினார். துருத்திச் சக்கரம் சுழலச் சுழல உமி தீப்பந்தமாக மாறுகிறது. அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், துருத்திச் சக்கரத்தின் ஆரக்கால்கள் மறைந்து வடிவான சக்கரமாக மாற்றம் பெறுகிறது.
தீயின் உக்கிரம் கூடியதில் ஆசாரி திக்குமுக்காடிப் போனார். அவரது மனைவியின் துருத்தித்தீ உள்ளோடிக் கங்குகள்தான் கனன்று கொண்டிருக்குமேயொழிய, இதுபோல அக்கினிப்பிழம்பாய் சீறியதில்லை.
ஆசாரி பதட்டத்துடன் எழுந்துபோய் கரித்துண்டுகளைக் கைநிறைய அள்ளிவந்து உலோகத்தின் மேற்பரப்பில் குமித்தார். துருத்திச்சக்கரத்தின் ஆரக்கால்கள் ஒரேயடியாய் மறைந்து போகவும், உலைக் கோலில் பொங்கி எழும்பும் ஊழித்தீயில் ஆசாரி பரபரப்புடன் தீக்கங்குளைத் தீண்டி விடுவதும், அடைகல்லில் உலோகத்தை வைத்துத் தட்டி எடுப்பதுமாக, இப்படி ஒரு வேகத்துடன் கூடிய ஒரு அழகான அருவாளை ஆசாரி ஒருபோதும் எதிர் கொண்டதில்லை.
அருவாளின் பதத்தை காய்ப்பேறிய தனது உள்ளங்கையில் வைத்து சுளுவு பார்த்தவர், கொண்டு போய் நீரில் நனைத்தார். கொதித்தடங்கியது நீர்மை.
துருத்திச்சக்கரத்தின் வேகம் மட்டுப்பட்டு அவள் எழுந்து நிற்க, பூரித்த உணர்ச்சிப் பெருக்கோடு, வீட்டிற்குள் ஓடிப் போய், வறுத்த நிலக்கடலையை கை நிறைய அள்ளிக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தார். கூடவே வெல்லக்கட்டிகளையும் கொடுத்தபோது, அவரது கை நடுக்கம் இன்னமும் தீராமலிருந்தது.
தினமும் வறுத்த கடலையும் வெல்லக்கட்டியும் அவள் நாவில் இனிப்புக் கூட்டினாலும், அவளது தொண்டைக்குழிக்குள் இறங்குவதென்னவோ, ஆரக்கால்கள் மறையும் சக்கரவேகம்தான்.
இப்படியாக வேகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த போதுதான் அவளது ஊருக்கு சைக்கிளோட்ட வருகிறான் மாரிமுத்து. கிராமத்தின் சுற்றுப்புறப்பகுதிகள் முழுக்க பரபரப்பான விளம்பரம் செய்து இரண்டு நாள் சைக்கிளோட்டத்தை ஆரம்பிக்கிறான். இரண்டு நாளும் சைக்கிளை விட்டிறங்காமல் சுற்றிக் கொண்டேயிருப்பது என்பது, தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் ஒரு பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. ஊர்மக்கள் சுற்றிலும் கூடி நிற்க, சைக்கிளில் மைதானத்தைச் சுற்றி வந்தான் அவன். திரை இசைப்பாடல்கள் ஒலிபெருக்கியில் முழங்க சைக்கிளை விதவிதமான பாணியில் ஓட்டிக்காட்டினான். குழல்விளக்குகளை முதுகில் உடைப்பதும், தீப்பந்தங்கள் சுற்றுவதுமான சிறுசிறு நிகழ்வுகள் கிராம மக்களை சுவாரஸ்யமாக்கின.
அவளுக்கு அந்த நிகழ்வு அடியோடு பிடிக்கவில்லை. சைக்கிளின் ஆரக்கம்பிகள் சோம்பலாகச் சுழலும் மனத்தொய்வில், எரிச்சலுற்றாள் அவள். நிகழ்வது சைக்கிளோட்டம் அல்ல, அதை முன்வைத்து நிகழ்த்தப்படும் கோமாளிக்கூத்து என்பதை உணர்ந்து கொண்ட அவள், அதனை வெறுப்புடன் நோக்கினாள். அது அவனுக்கு நேரும் அவமானம் அல்ல, வேகம் என்னும் அற்புதத் தன்மைக்கு நேரும் அவமானம் என்றும், அதை ஆராதிக்கும் தனக்குநேரும் அவமானம் என்றும் கருதினாள். இந்தப் போக்கிலிருந்து அவனை திசைமாற்றி விட்டு அவனிடமிருந்து வேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பதட்டமடைந்தாள். இந்த உணர்வோட்டங்களை எப்படி அவனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது புரிபடாமல் முழித்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் ஒலிபெருக்கி ஒலித்தது. ‘மக்கள் தங்களது விருப்பங்களை காகித்தில் எழுதிக் கொடுக்கலாமென்றும், அதை அவன் நிறைவேற்றுவான் என்றும்’ சொன்னபோது உஷாரானாள் அவள்.
மக்கள் பலத்த ஆரவாரத்துடன் எழுதி அவனிடம் அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொன்றாய்ப் படித்து அதன்படியே நிறைவேற்றினான். சைக்கிளை ஓட்டிக் கொண்டே சட்டையை மாற்றிப் போடச்சொல்லிய ஒருவரின் விருப்பத்தை பலத்த கைதட்டல்களினூடே செய்தான், கண்களை கறுப்புத்துணியால் இறுகக் கட்டிக் கொண்டு சைக்கிளை ஓட்டும்போது, ‘விருப்பம் சொன்ன நேயர்’ நெஞ்சை நிமிர்த்தி விட்டுக் கொண்டார், பலூனை ஊதி உடைப்பது, தொப்பியை வீசியெறிந்து கீழேவிழாமல் பிடிப்பது என்றெல்லாம் கலக்கலாய்ப் போய்க் கொண்டிருந்த நிகழ்வு, ஒரு காகிதத்தைப் படிக்கும்போது உடைந்தது.
‘எனக்கு நீங்கள் செய்யும் கோமாளிக்கூத்து எதுவும் பிடிக்கவில்லை. எனக்கு வேகம்தான் பிடிக்கும்’ என்ற வரிகளை அவன் கண்கள் படித்ததும் பலத்த அதிர்ச்சிக்குள்ளானான். நல்ல வேளையாக, அதுவரை சத்தம் போட்டுப் படித்து வந்தவன் இந்த வரிகளை மனதிற்குள்ளேயே எழுத்துக் கூட்டிவிட்டான். ஓரிரு நிமிடங்கள் என்ன செய்வதென்று விளங்காமல் மைதானத்தில் கண்களை ஓட்டினான். கூடி நிற்பவர்களின் ஆரவாரம் அவனை அதிலிருந்த மீட்டு மீண்டும் உற்சாகமூட்டியது. அடுத்த நேயர்விருப்பத்திற்குத் தாவினான் அவன். அவள் கடுங்கோபம் அடைந்தாள். உடனே அடுத்த காகிதத்தை எழுதிக் கொடுத்தாள். ‘வேகம் என்பது என்ன தெரியுமா? நீங்கள் அதை உதாசினம் செய்கிறீர்கள்’
அதைப்படித்தவுடன் மேற்கொண்டு இதை மறுக்கக்கூடாது என்பது போல அவனது கால்கள் மிதிவிசையை உந்தித்தள்ளின. சைக்கிள் வேகமெடுத்தது. அவளுக்குள் அவன் மீது கொண்டிருந்த குமைச்சல் சற்றே இறங்கியது. அந்த இடத்தைக் கவ்விக் கொண்டிருந்த புழுக்கம் மறைந்து இதமான காற்று வீசியது. மீண்டும் காகிதத்தில் வேகத்தின் ஈர்ப்புத் தன்மையை எழுதிக் கொடுத்தாள். அவன் அதைப் படிக்கப்படிக்க கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறுகிறான் என்பதை தனது வண்டியின் பாய்ச்சல் காட்டிக் கொடுத்தது. வேகம் பற்றிய பல்வேறு பார்வைகளை, கொஞ்சம் கொஞ்சமாக தனது உள்ளக்கிடக்கையைக் கொட்டி அனுப்பினாள்.
அவன் பல்வேறு ஊர்களில் சைக்கிளோட்டியிருக்கிறான். விதவிதமான நேயர்விருப்பங்களைக் கேட்டிருக்கிறான். ஆனால் இது கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு முற்றிலும் புதியது. தனது வாழ்வையை மாற்றவல்ல புதிர்த்தன்மை கொண்டது அது என்பதை அவன் உணர்ந்த போது, அவளது உலகத்திற்குள் வெகுதூரம் பாய்ந்து போக ஆரம்பித்திருந்தான். இப்போது சோம்பலாக வேடிக்கை பார்த்த கூட்டம் அவனது விறுவிறுப்பூட்டும் வேகமான சைக்கிளோட்டத்தில் இரண்டறக்கலந்து பெரும் ஆதரவை அளித்தது.
ஆனால் இரண்டாம் நாள் மதியத்திற்குள் தனது கால்கள் சோர்ந்து கொண்டேயிருந்ததை உணர்ந்தான். இன்னும் ஒருஇரவும் பாதிப்பகலும் கழிய வேண்டும். தாகத்தில் நாக்கு வெளிவாங்கிக் கொண்டிருந்தது. உடம்பின் எல்லாப் பகுதிகளும் விண் விண்ணென்று தெறித்தன. பாதங்கள் வீங்கிப் பெருத்து விட்டன. மைதானம் கிறுகிறுவென்று சுற்றுகிறது. பல்வேறு இடங்களில் ஐந்து நாட்களெல்லாம் சைக்கிளோட்டியிருக்கிறான். இங்கு இரண்டு நாட்களுக்கே கணுக்கால்கள் குடைந்து தள்ளுகின்றனவே. காரணம், அந்த பாழாய்ப்போன வேகம்!
பேசாமல் இந்த வேக விளையாட்டை இத்தோடு விட்டுத் தொலைத்து விட்டால் தப்பித்துக் கொள்ளலாம் இல்லையெனில் நாக்குத் தள்ளியே சாகவேண்டியதுதான் என்று உணர்ந்தான். ஆனால், இந்த ஆட்டத்துக்குள் கட்டமைந்திருக்கும் அந்தப்புதிர்தான் வாழ்வின் அர்த்தமே என்பதாகவும், தனது வாழ்வில் இதுவரை கிட்டாத ஒரு அபூர்வத் தருணம் என்றும், அதை இழந்தால் தனது வாழ்க்கை சூன்யமாகிவிடும் என்பதாகவும் ஏதேதோ யோசித்தவனாய் வண்டியை வேகம் மாறாமல் மிதித்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாய் மாலை மங்கும் பொழுதுடன் மக்கள் கூட்டமும் திரண்டது.
இன்னும் முழுமையாக ஒரு இரவு மீதியிருக்கிறது.
சட்டென்று அவனுக்கு இன்னொரு யோசனை ஓடியது. அந்த வேகத்தைத் தனக்குள் பாய்ச்சிய அந்த மனிதர், அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில், தனது இணையாக வந்து சுற்றினால் இந்தச் சோர்வு பறந்துபோய்விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த நினைப்பே தீராத தாகத்தையாற்றும் சுனையாக நாவுக்குள் ஈரம் பாய்ச்சியது. அதே வேகத்துடன் ஒலிபெருக்கியில், தானே நேயராக மாறினான். இந்த ஆட்டத்தில் தன்னை மாற்றி விட்ட அந்த மனிதருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இந்த விளையாட்டு தனக்கு மிகமிகப் பிடித்திருக்கிறதென்றும், இது, இனி தனது ரத்த அணுக்களோடு கலந்து போய்விட்ட அம்சம் என்றும், இதைத் தன்னால் விட்டுவிட முடியாது என்றும் உணர்ச்சி வயமாகத் தெரிவித்தான். ஆனால், இதே வேகத்தில், தான் நாளைக் காலை வரை தாக்குப்பிடிக்க முடியாது என்றும் தன்னோடு அவரும் கூட வந்து சுற்றினால், அது ஒரு தோழமையாக இருக்கும் என்றும், ஒரு மானசிகமான பேச்சுத்துணையாக மிக எளிதில் இரவைக் கழித்துவிடலாமென்றும் தெரிவித்தான்.
ஆனால், கூட்டத்திலிருந்து எந்த பதிலும் இல்லை.
மறுபடியும் நா வறட்சி கொள்கிறது. ஓரிருவர், ‘மிகவும் கஷ்டமாக இருந்தால் நீங்கள் முன்பு போலவே சாதாரணமாக ஓட்டுங்கள்’ என்று எழுதியனுப்பினர். அவனுக்கு வந்து சேர்ந்த காகிதங்களில் ஒன்று மட்டும் உயிரோட்டமாக மின்னியது. ‘கவலை வேண்டாம், எக்காரணம் கொண்டும் வேகத்தைக் குறைக்க வேண்டாம், உங்களோடு சேர்ந்து நானும் விடியவிடியச் சுற்றுகிறேன்.’
அவனது ஆழங்களில் பீய்ச்சியடித்தது பெருஞ்சுனை. கிறுகிறுப்பாய்ச் சுற்றிக் கொண்டிருந்த மைதானத்தை தீர்க்கமாக ஒருமுறை சுற்றிலும் அவதானித்தான். 360 டிகிரிக் கோணத்தில் சுற்றி நின்றது அது.
அன்று இரவு. அருக்காணி வீட்டில் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பா மில்லில் இரவு வேலை. அண்ணன் ராகி மாவுப் பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு வெளியூர் போய்விட்டார். அம்மா காலையிலிருந்து ராகிமாவு அரைத்து களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இருண்மையான ஒருவெறுமை அந்தச் சூழலை இறுக்கிக் கொண்டிருந்தது. அந்தக் கனத்த மௌனத்தினூடே தூரத்தில் வேகமாய்ச் சுற்றும் சைக்கிளின் ஓட்டத்தை அவளது செவிகள் உள்வாங்கிக் கொண்டிருந்தன.
அவளது வீடு மைதானத்திலிருந்து சற்றே தள்ளியிருந்தது. வீட்டிலிருந்து பார்த்தால் மைதானத்தின் பாதிப்பகுதி மட்டும் தெரியும்படியான காட்சிப்பரப்புக் கொண்டது. அவளது பார்வைக்கு தூரத்திலுள்ள மைதானத்தில் நிகழும் சைக்கிளோட்டத்தின் அரைவட்டக்காட்சி வந்து வந்து போகிறது.
ஒரு கண்சிமிட்டலில், அந்தக் காட்சியின் வேகம் மெதுவாகக் குறைந்து கொண்டே வருவதை உணர்கிறாள். செய்வதறியாமல் வெறித்த அவளது பார்வை மைதானத்திலும், தூரத்து வானிலும், இருட்டிலும், நட்சத்திரங்களிலும், அலைவுபட்டு, எதிரிலிருந்த சுவரோரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த கேழ்வரகு மூட்டையில் நிலைகுத்தி நின்றது. ஓரிரு கணங்கள் அதை உறுத்துப் பார்த்தாள், சட்டென்று அவளுக்குள் ஒரு யோசனை மின்னலாய் ஓடியது. பரபரப்புடன் எழுந்து அந்த ஆரியமூட்டையை அவிழ்த்துக் கீழே கொட்டினாள். குவியலாய்ச் சிதறி அம்பாரமாய்க் குமிந்து நின்றது கேழ்வரகுப்பண்டம். அருகிலிருந்த ஆரியக்கல்லின் முன் கால்களை அகட்டி வைத்து அமர்ந்தாள். எதிரில் மைதானத்தில் சைக்கிளோட்டம் சரேலென்று வந்து போய்க் கொண்டிருந்தது.
ராகி அம்பாரத்தில் கைநிறைய அள்ளி ஆரியக்கல்லின் அரைகுழியில் போட்டாள். அதன்பிறகு ஆரியக்கல் சுற்ற ஆரம்பித்தது. விசையுடன் சிதறியது ஆரியமாவு.
தனது சைக்கிளோட்டத்தில் வந்து இணைந்து கொள்ளப் போவதாகச் சொல்லிய அந்தத் தருணம் இன்னும் வரவில்லையே என்ற ஆதங்கத்துடன் வேகம் மாறாமல் ஓடிக் கொண்டிருந்தது அவனது வண்டி. மைதானத்தில் மக்கள் நடமாட்டமேதுமில்லாதபோதும், பைத்தியம் பிடித்தவன்போல வேக வேகமாக சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தான் அவன். யாருமில்லாத இடத்தில், யாருக்காக இது? எனக்குப் பைத்தியமா? என்னைப் பைத்தியமாக்கியது யார்? என்னை இந்த மாய ஓட்டத்தில் சிக்க வைத்திருக்கும் சூட்சுமம் எங்கிருக்கிறது என்றெல்லாம் பலவாறாக சிந்தனை செய்து கொண்டே வண்டியை ஓட்டினாலும், வேகத்தைக் குறைக்க மனம் ஒப்பவில்லை.
அப்போதுதான் அந்த ஓசையை உணர்ந்தான், தன் வண்டியோட்டத்தின் ஓசையுடன் இணைந்து இன்னொரு வண்டி ஓடிக் கொண்டிருக்கும் ஒலியோசை. உடம்பெங்கும் கூடியிருந்த வலி நொடியில் மாயமாய் மறைந்து போயிற்று. காகிதத்தில் எழுதிக் கொடுத்த அந்த வாக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற வேகத்தில் ஓடிக்களிக்கிறது சைக்கிள்.
மைதானத்தில் சைக்கிள் சுற்றும் வேகத்திற்கும் இங்கு ஆரியக்கல் அரைபடும் விசைக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறாள் அவள். தனது பார்வையில் பட்டுப்போகும் சைக்கிளோட்டத்தின் பிறைவட்டம், தன் இணையை அடையாளம் கண்டு கொண்ட பூரிப்பின் அதிவேகத்தில் வளர்பிறையாக மாறுகிறது.
அவனுக்கு நேர் எதிரே தூரத்தில் ஆவேசத்துடன் சுழன்று வரும் ஆரியக்கல்லின் சுழற்சியில் உருக் கொள்ளும் ஒலியோசையை ஆழ்ந்து சுவாசித்தான். ஆழம் காணமுடியா தூரத்திலுருந்து அவனை இயக்குவது வெறும் ஒலியோசை மட்டுமல்ல, அதனூடான வளையோசையும்தான் என்பதை அவன் உணர்ந்தபோது, தான் ஒரு வேகமாகவே மாறிப் போனான்.
இரு வேறு நிலைகளுக்குமான தாத்பர்யம் மிகநேர்த்தியாக ஒருங்கு கூடுகிறது. அவளுக்கு நேர் எதிரே கண்ணில் படும் சைக்கிளின் அரைவட்ட ஓட்டத்தின் வேகத்தைக் கணித்து, கையை வெடுக் வெடுக் என மாற்றிப் போடும் மனவிலகலினூடாக ஆரியக்கல்லைச் சுற்றும் அழகில், நேர்கொண்ட வேகத்தில் பாய்ந்து வரும் சைக்கிளின் பாதையிலிருந்து விலகி, வழி கொடுக்கும் தரிசனத்தை நிகழ்த்திப் பார்க்கிறாள். இரண்டையும் இணைக்கவல்ல பெரும் புதிரையும் வாழ்வின் அர்த்தத்தையும் மாற்றிப் போட்டு அந்த ஆட்டத்தை வேறுவிதமாய் ஆடிப்பார்க்கிறாள் அருக்காணி.
வேகவேகமாய்ப் புலர்ந்தெழுந்தது பொழுது.
சைக்கிளோட்டம் காலையில் வெற்றிகரமாய் முடிந்த போது, கிராமத்தலைவர் மாலையிட்டு அவனை வாழ்த்தினார். ஊரே உற்சாக முகமாய் இருந்தது. தன்னை அந்த நிலைக்கு உயர்த்திய முகம் காட்டாத அந்த உருவம் யார் என்று தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்கள் திரளில் தேடித்தேடிப் பார்த்தான். தென்படவில்லை. மைதானத்தின் மையத்தில் விரித்திருந்த கல்லாத் துணியில் சில்லறைக்காசுகளும் நோட்டுகளும் குமிந்திருந்தன. அவனது அத்தனை வருட சைக்கிளோட்டத்தில் அன்றைக்குக் கிடைத்த பொருளும் புகழும் அவனைத் திக்கு முக்காடச் செய்தன. மக்கள் திரள் மெல்ல மெல்லக் களைந்ததும், கல்லாத்துணியை எடுத்து வந்து கோயில் வாசலில் விரித்து வைத்து சாமி கும்பிட்டான். சில்லறைக்காசுகளை விடவும் நோட்டுக்கள் அதிகளவில் சேர்ந்திருந்தன. பணத்தைச் சீராக எடுத்து ஒழுங்கு செய்த போதுதான், அந்தக் காகிதம் அவனை நோக்கிப் படபடத்தது. அவனது அடிமனசில் ஆர்ப்பரித்தெழுந்தது வேகம்.
அடுத்த பாய்ச்சலில் மாரிமுத்துவுடன் அந்த ஊரைவிட்டு ஓடிக் கொண்டிருந்தாள் அருக்காணி.
அதன்பிறகு, அந்த சைக்கிளோட்டத்தை அதிவேகமான காட்சியாக வடிவமைக்கிறாள் அவள். வேகம். அளி வேகம். ஆனந்த வேகம்.
இருவரும் பல்வேறு ஊர்களில் வண்டியோட்டுகின்றனர். வருமானத்திற்கு ஒன்றும் குறைச்சலில்லை. வாழ்வின் அர்த்தபூர்வமான இயக்கமாக, ஆளுமையின் வெளிப்பாடாக, தனது வாழ்வையே சைக்கிளோட்டமாக நிகழ்த்திப் பார்க்கிறாள் அருக்காணி. அப்படியான ஒரு பொழுதில்தான் அவளுக்கு அந்த தரிசனம் நிகழ்ந்தது.
ஒரு ஊரில் அவர்களது சைக்கிளோட்டம் நடந்து கொண்டிருந்தது. அவளும் அவனும் மிகுந்த வேகத்தில் தங்களது ஓட்டத்தை ஆடிக் கொண்டிருந்தனர். வட்டப்பாதையில் சீறிவரும் வேகம், எதிரெதிர் சந்திப்புகளின் மிக அருகாமையில், எழுதி வைத்தாற்போல சட்டென விலகிச்செல்லும் அபாரமான மனவிலகல். ஒரு அற்புதமான கலைப் பாங்காக நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்வு, அவனிடம் போலியாக மாறுகிறது.
ஓட்டம் நடைபெறும் மைதானத்தின் வட்டப்பாதை ஒரே சீராகச் சென்று திரும்பும் பரப்புடன் விரிந்து கிடக்கிறது. அதன் விளிம்புப் பகுதியில் வேகமாகச் சீறிவரும் எதிரும்புதிருமான இரு சைக்கிள்கள் அருகில் வந்ததும், கண்ணிமைப் பொழுதில் லாவகமாக விலகி, மீண்டும் இணையும் மந்திரப்பாதை அது. அதுதான் கலை வெளிப்பாட்டில் விறுவிறுப்பேற்றும் அபூர்வத்தருணம். ஆனால் மெதுவாக அந்தப் பாதையிலிருந்து விலகி மைதானத்தின் உட்புறமாய் சுருங்கிக் கிடக்கும் பரப்பில் தனது ஓட்டத்தை நிகழ்த்த ஆரம்பித்தான் அவன். அந்த உட்கூடு என்பது அதிக உழைப்பையும், அதிக சக்தியையும் அதிக நேரத்தையும், விழிப்புடன் இருக்கும் கவனத்தையும் கேட்காதது. மாறாக ஓரு கோமாளித்தனமான மனநிலையை உருவாக்குவது, போலியான நாயக பிம்பத்தைக் கட்டமைப்பது, மதிப்பீடுகளைப் போலியாக்குவது, தகுதியற்றவனைத் திறமையாளனாக முன் மொழிவது.
அந்தப் பாதை அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவனுடைய தன்மை மாறுகிறதை சுட்டிக் காட்டினாள் அவள். வேகம் என்பதை வாழ்க்கைத் தொழிலுக்கான பண்புகளாகப் பார்க்கிறான் அவன். அவளோ, அதை ஒரு வாழ்வியல் அர்த்தத்தின் வெளிப்பாடாகப் பார்க்கிறாள். அவனது பாதை மிகக் குறுகியது, போலித்தனமான பாசாங்கு கொண்டது என்றும், தனது பாதை மிகமிக விரிந்து பரந்தது என்றும் விவாதித்தாள். ‘நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளாததற்குக் காரணம் கூட இதுதான். ஏனெனில், அதில் பொறுப்புகள் கூடிவிடுகின்றன. நாம் இருவரும் சேர்ந்து வாழ்வியல் அர்த்தத்திற்காள ஒரு பாதையை உருவாக்குகிறோம் அதில் எப்போது நீ விலகுகிறாயோ, அந்தக் கணமே நானும் உனது பாதையிலிருந்து விலகிவிடுவேன்’ என்று தீர்மானகரமாகச் சொல்லி விட்டாள்.
அவளில்லாத உலகத்தை அவனால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை. இப்போது, அவனது ஓட்டம் பரந்து விரிந்த அந்தப் பாதையில் அதிவேகத்துடன் அவளை எதிர்கொண்டு இணைந்து போய்க் கொண்டிருக்கிறது.
***
அவள் என்னுடன் பேசி முடித்து விட்டு தனது இணையைப் பார்க்கிறாள். அவன் தனது சைக்கிளின் மீது தாவி உட்கார, அருக்காணி தனது சைக்கிளை மிதிக்கிறாள். 100 கி.மீ. வேகத்தில் சுழல்கிறது பூமிப்பந்து.
மின்னற் பொழுதே தூரம் தேவதேவனுக்குக் கவிதை என்றால் அருக்காணிக்கு வாழ்க்கை.
*****